நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: கற்களை வீசி இலங்கை கடற்படை அட்டூழியம்
கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர்.
4 நாட்கள் வேலைநிறுத்தத்திற்குப் பிறகு ராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது கற்கள் மற்றும் இரும்பு கம்பிகளை வீசி எறிந்துள்ளனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள், தங்கள் படகுகளில் இருந்த விளக்குகளை அனைத்து படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர். தொடர்ந்து மீனவர்களை துரத்திய இலங்கை கடற்படையினர், 200-க்கும் அதிகமான படகுகளில் இருந்த வலைகளை சேதப்படுத்தி , இனி மீன்பிடிக்க வரக்கூடாது என மிரட்டியுள்ளனர். வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதால் மீனவர்கள் வேதனையுடன் கரைதிரும்பினர். இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.