ராமநாதபுரம் | வலையில் சிக்கிய அரிய வகை ஆமைகள் - மீண்டும் கடலில் விட்ட மீனவர்களுக்கு பாராட்டு!
செய்தியாளர்: அ.ஆனந்தன்
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் வாழ் உயிரினங்களான கடல் பல்லி, கடல் குதிரை, கடல் பசு, சிற்பி, சங்கு, பவளப்பாறை என சுமார் 1400 க்கும் அதிகமான அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அடுத்த புதுக்குடி கிராமத்தில் இருந்து ராமகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப் படகில் மணி, சதீஷ், கனகராஜ், பாலமுருகன் ஆகிய நான்கு மீனவர்கள் இன்று அதிகாலை மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அவர்களது வலையில் அறிய வகை சித்தாமை இரண்டு அடுத்தடுத்து சிக்கியுள்ளது. இதையடுத்து மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை சித்தாமையை மீட்டு பத்திரமாக மீண்டும் கடலில் விட்டனர்.
அதேபோல் நம்புதாலை கடற்கரையில் இருந்து நாகேந்திரன் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப் படகில் உலகேஸ்வரன், விஜய், தேவா மற்றும் பூவரசன் ஆகிய நால்வரும் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மீனவர்கள் வலையில் அரிய வகை பெருந்தலை ஆமை ஒன்று சிக்கியது இதனை கண்ட மீனவர்கள் வலையில் இருந்து ஆமையை பத்திரமாக மீட்டு கடலில் விட்டனர்.
இதைத் தொடர்ந்து கடலில் பத்திரமாக ஆமைகள் விடப்பட்ட வீடியோவை தொண்டி மெரைன் காவல் நிலைய போலீசாருக்கும், வனத் துறையினருக்கும் மீனவர்கள் அனுப்பி வைத்தனர். அதன் அடிப்படையில் கடலில் பாதுகாப்பாக ஆமையை விட்ட மீனவர்களை வனத்துறை மற்றும் மரைன் போலீசார் வெகுவாக பாராட்டியுள்ளனர். இது தொடர்பாக விரைவில் மீனவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.