ராமநாதபுரம்: ஊரணியில் குளிக்கச் சென்ற தந்தை, மகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
திருவாடானை அருகே குளிக்கச் சென்ற தந்தை, மகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். பிறந்த நாளில் சிறுமி இறந்துள்ளதால் கிராம மக்கள் சோகத்தில் உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள நிலமகிழமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஆதிமூலம் என்பவரின் மகன் ஜோதிமணி (39). கோயம்புத்தூரில் உள்ள நூற்பாலையில் வேலை பார்த்து வரும் இவர், தேர்தலில் வாக்களிக்க விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் ஜோதிமணி தனது வீட்டின் அருகே உள்ள ஊரணியில் குளிக்கச் சென்றபோது தனது (4) வயது மகள் யாசினியையும் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, மகளை கரையில் உட்கார வைத்துவிட்டு ஊரணியில் குளித்தவர் நீண்ட நேரம் ஆகியும் வெளியில் வராத நிலையில் 4 வயது குழந்தை தந்தையை காணவில்லை எனத்தேடி தானும் ஊரணியில் இறங்கியுள்ளது.
பின்னர் சிறிது நேரத்தில் இருவரும் நீரில் முழ்கி மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இருவரது உடலையும் மீட்டு எஸ்பி.பட்டிணம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் அங்கு வந்த போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திருவாடனை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இன்று பிறந்தநாள் கொண்டாட இருந்த குழந்தை யாசினி தனது தந்தையுடன் ஊரணி நீரில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.