ராமநாதபுரம்| எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இரண்டு படகுகளுடன் 14 தமிழக மீனவர்கள் கைது
செய்தியாளர்: அ.ஆனந்தன்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 650க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர் . இதையடுத்து மீனவர்கள் மீன்பிடித்து விட்டு இன்று அதிகாலை கரை திரும்பிக் ;கொண்டிருந்தனர்.
அப்பொழுது இலங்கை வடக்கு மன்னார் கடற்பரப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த இரண்டு மீன் பிடி விசைப் படகையும்,அதிலிருந்த அந்தோணி, நிகிதன், சேசு பூங்காவனம், நிஷோன், அய்யாவு, உள்ளிட்ட 14 மீனவர்களையும் கைது செய்து இரணைத்தீவு கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து மீனவர்களிடம் முதற்கட்ட விசாரணை முடித்துக் கொண்டு மீனவர்கள் 14 பேரும் விசைப் படகுகளுடன் கிளிநொச்சி மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு மீன்பிடி தொழிலாளர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.