ரஜினி தெளிவாக இருக்கிறார் ! குழம்பியது யார் ?

ரஜினி தெளிவாக இருக்கிறார் ! குழம்பியது யார் ?

ரஜினி தெளிவாக இருக்கிறார் ! குழம்பியது யார் ?
Published on

அரசியலுக்கு வர போவதாக ரஜினி அறிவித்த பிறகு, சென்ற முதல் களம் தூத்துக்குடி. அந்த வகையில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை ரஜினி சந்தித்தார், ஆறுதல் கூறினார் என்பது தான் செய்தியாக இருக்கும் என்று பார்த்தால்... ரஜினி செய்தியாளர்களை சந்தித்ததும் அந்தச் சந்திப்பில் ரஜினி கூறிய விஷயங்களும் தான் இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களையும் ஊடகங்களையும் ஆக்கிரமித்திருக்கின்றது.  

ரஜினிக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி வரும் நிலையில் மூத்த பத்திரிகையாளர் மாலன் இது குறித்து நம்மிடம் பேசினார்.  " ரஜினி மிகவும்  வெளிப்படையாகப் பேசுகிறார். வாக்கு வங்கி என்பது அவர் நோக்கமல்ல. ஆட்சிக்கு வரணும் என்ற எண்ணத்துடனோ வாக்குகள் தான் முக்கியம் என்று நினைத்தோ பேசவில்லை. சமூக ஊடகங்கள்தான் அவர் கருத்தை ஏற்காமல் விமர்சனம் செய்து பதிவிடுகிறார்கள். அரசியல் கட்சிகள் அவர்களுக்கு ஏற்ப  சாதகமானவற்றை எடுத்து கொள்கிறார்கள்..ரஜினி குறித்து அவருடைய ரசிகர்களும் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். 

மனதில் பட்டதை பேசக் கூடிய தலைவரை இப்போது தான் பார்க்கிறோம். அதனால் தான் விமர்சனம் எழுகிறது. மக்களை இரைந்து அரசியல் செய்யணும்னு நினைக்காமல்  மனதில் உள்ளதை பேசுகிறார். உண்மை பேசுறவங்களுக்கு வேல்யூ இருக்கு.." என்றார். 

சிஸ்டம் சரியில்ல ...வெற்றிடம் இருக்கு.. தமிழ்நாட்டிற்கு ஒரு தலைவன் தேவை. எம்ஜிஆர் போல் என்னால் ஆக முடியாது என்றாலும் அவர் ஆட்சியை என்னால் தர முடியும் .இவையெல்லாம் ரஜினி முன்பு பேசியவை அந்த வகையில் அவர் அதிமுகவின் வாக்கு வங்கியையே குறி வைக்கிறார் என்றெல்லாம் பேசப்பட்டன. ஆனால் தற்போது ரஜினி முதலமைச்சர் சொல்லியது போலே பேசியிருப்பதும், அதை பாராட்டி அதிமுக நாளிதழ் செய்தி வெளியிட்டிருப்பதும் ரஜினி உண்மையிலேயே யாரை குறிவைக்கிறார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதே கேள்வியை மூத்த பத்திரிகையாளர் ராதகிருஷ்ணனிடம் முன் வைத்த போது "ரஜினிக்கே அது புரியாதப்ப நமக்கு எப்படி புரியும் என்று தொடங்கினார். ரஜினியின் உண்மையான முகம் வெளிவந்துருக்கு. அரசியலுக்கு வருகிறவர் மனதில் பட்டதை  ஏதேச்சையாக பேசக் கூடாது. முதலில் ஆன்மிக அரசியல் என்றார் அதில் தனித்துவம் இருந்தது. அதை அவர் இழந்துட்டார். மக்களுக்கு ஏற்றவாறு அவர்பேசவில்லை. அடிப்படை ஷரத்தே  புரியாமல் இவர் அரசியலுக்கு வந்தால் மக்களின் நிலை என்னாவது! தூத்துக்குடி விஷயத்துல அவரா போய் விசாரிச்சு தெரிஞ்சு பேசுனாரா...யாரோ சொன்னத கேட்டு பேசுனாரா தெரியல. மக்களுக்கு என்ன தேவையோ அத தான் பேசனும் மக்களோட பிரச்சினைக்கு தீர்வு என்னங்கிறத தான் தேடணும். இப்ப பேசியிருக்குற இந்த விஷயத்துல இருந்து அவர் எப்படி மீண்டு வருவார்னு தெரியல. ஆனா மீண்டு வர்றது கஷ்டம் தான். ஸ்டெர்லைட் விஷயத்துல அவர் மக்கள் விரோத போக்க தான் கடைபிடிச்சிருக்கார்."

ரஜினியை பொருத்தவரை சில விஷயங்களை ஆணித்தரமாக மீண்டும் மீண்டும் கூறுகிறார். ”போராட்டம் பொதுமக்களால் நடத்தப்பட்டது. ஆனால் சமூக விரோதிகள் புகுந்த போது அது மாறி விட்டது, அதற்கு அப்பாவி மக்கள் பலியாகி விட்டனர். அது தவறு. அதே நேரத்தில் எல்லாவற்றிற்கும் போராடக் கூடாது, அப்படி போராடினால் சமூக விரோதிகளால் போராட்டம் இது போன்ற இழப்பை ஏற்படுத்தும் , காவலர்களை தாக்கியதால்தான் இந்தத் துப்பாக்கிச் சூடு, ஆனால் தாக்கியவர்கள் பொதுமக்கள் இல்லை, சமூக விரோதிகள், அவர்களை தனக்கு தெரியும்” என்கிறார். 

அவருடைய கருத்துகளில் ரஜினி எப்போதும் போலவே தெளிவாக இருக்கிறார். காவல்துறையினரை தாக்குவது தவறு என்று அரசியல் அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து கூறி வருகிறார். வார்த்தைகளை விழுங்கி பேசாமல், இயல்பாக பட்டென உடைக்கும் குணம் அவருக்கு வாய்த்திருக்கிறது, ஆனால் அது அரசியலுக்கு சரியா என்ற கேள்வி எல்லோருக்கும் எழுந்திருக்கிறது. ஏனெனில் எந்தச் செயலுக்கும் ஆளும் கட்சியாக சரியென்பதும் எதிர்கட்சி என்றால் தவறென்பதுமே நம் மக்கள் பழக்கப்பட்ட அரசியல். இது போன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் கண்டிப்பாக கண்டிக்கப்பட வேண்டும் என்பதும் உண்மை. ஆனால் ரஜினி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து விட்டு அதை தாண்டி வேறு எதையோ தேடுகிறாரே என்ற வியப்பே இந்தக் குழப்பத்துக்கு காரணமாகவும் இருக்கலாம். 

உணர்வுப்பூர்வமாக அனைவருமே தூத்துக்குடி சம்பவத்தை அணுகி வரும் சூழலில் எழுந்துள்ள இந்த விமர்சனங்களே ரஜினியின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானித்து விடுமா? அல்லது இதிலிருந்து மீண்டு வருவாரா? அதுவரை மற்ற கட்சிகளின் அரசியலுக்கு தாக்கு பிடிப்பாரா? இவற்றுக்கெல்லாம் ரஜினியின் அடுத்த அடுத்த நகர்வுகள் தான் நமக்கு விடையை தரும். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com