அரசியல் மாற்றத்திற்கு ரஜினிகாந்தின் 3 திட்டங்கள்...!
அரசியல் மாற்றத்திற்கு 3 திட்டங்கள் வைத்துள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை லீலா பேலஸ் விருந்தினர் மாளிகையில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், “தற்போதைய காலகட்டத்தில் அரசியல் மாற்றம் கண்டிப்பாக தேவை. சிஷ்டம் சரியில்லை. அதை சரிசெய்ய படித்தவர்கள், இளைஞர்கள், நல்லவர்கள் முன்வர வேண்டும். அரசியல் சாக்கடை என்று விலகி செல்லக் கூடாது. அரசியல் மாற்றத்திற்கு 3 திட்டங்களை வைத்திருக்கிறேன். அதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
திட்டம் 1 : தேர்தலின்போது பல பதவிகள் கொண்டு வரப்படும். அவற்றில் பல கட்சி நிர்வாகிகள் பயன்படுத்தப்படுவர். ஆனால் தேர்தலுக்கு பிறகு அத்தனை பதவிகள் தேவைப்படாது. அதை தேர்தலுக்கு பிறகு அகற்ற வேண்டும். தேவையான கட்சி பதவிகள் மட்டுமே இருக்கவேண்டும். தற்போது சிலர் அதுபோன்று கிடைத்த கட்சி பதவிகளையே தங்களது தொழிலாக முன்னிறுத்தி கொள்கின்றனர். அதனால் முதலில் தேவையான பதவிகளை வைத்துக்கொண்டு தேவையில்லாத பதவிகளை தூக்கிவிட வேண்டும்.
திட்டம் 2: இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். தற்போது செயல்பட்டு வரும் பெரும்பாலான கட்சிகளில் முதியவர்களே பதவியில் இருக்கின்றனர். அதுபோன்று இல்லாமல் 60-லிருந்து 65 சதவீதம் வரை படித்தவர்கள், இளைஞர்கள், ஏரியாவில் பேர் வாங்கியவர்களுக்கு சீட் கொடுப்பேன். வேறு கட்சியில் திறமை இருந்தும் வாய்ப்பு இல்லாதவர்கள், நல்லவர்களுக்கு சீட் கொடுப்பேன். மீதி ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகளுக்கு சீட் கொடுப்பேன். அதுபோன்றவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.
திட்டம் 3: ஆட்சிக்கு ஒரு தலைமை. கட்சிக்கு ஒரு தலைமை என்பதே என் முடிவு. முதல்வர் பதவிக்கு வர வேண்டும் என நினைத்து கூட பார்த்தது இல்லை. நான் ஒரு பாலமாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். எல்லாதுறைகளிலும் உள்ள வல்லுநர்களை வைத்து குழு அமைக்கிறோம். பதவிக்காக வருபவர்கள் என்னுடன் வரவே வேண்டாம். பொதுசேவைக்காக வருபவர்கள் வரட்டும் என்பதே என் கொள்கை” எனத் தெரிவித்தார்.