“கலைஞருக்கு மெரினாவில் இடம் கொடுங்கள்” - ரஜினிகாந்த்
மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய இடம் மறுக்கப்பட்டதை எதிர்த்து காவேரி மருத்துவமனை வளாகத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவேரி மருத்துவமனையில் 10 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு உயிரிழந்தார். கருணாநிதி மறைவை அடுத்து அவரது உடலை சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்ய திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. கோரிக்கை அடங்கிய மனுவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் திமுக தலைவர்கள் கொடுத்தனர்.
வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும், சட்ட சிக்கல்கள் உள்ளதாலும் மெரினாவில் கருணாநிதிக்கு இடம் அளிக்க இயலாது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்ததை அடுத்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க கோரி திமுக சார்பில், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இரவு 10.30 மணியளவில் விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “மதிப்பிற்குரிய அமரர் கலைஞர் அவர்களுக்கு, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய, தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அது தான், நாம் அந்த மாமனிதருக்கு கொடுக்கும் தகுந்த மரியாதை” என தெரிவித்துள்ளார்.

