ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட 10 நிர்வாகிகள் ரஜினிகாந்திற்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளனர்.
ரஜினி மக்கள் மன்றத்தின் கடலூர் மாவட்ட கெளரவ செயலாளராக இருந்த ஓ.எல். பெரியசாமி, விருதாசலம் நகர செயலாளர் ரஜினி பாஸ்கர், விருதாச்சலம் துணைச் செயலாளர் தென்றல் முருகன் உள்ளிட்ட 10 பேரை ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் இளவரசன் சமீபத்தில் நீக்கியிருந்தார். இதனால் இளவரசன் தரப்பிற்கும், தென்றல் முருகன் தரப்பிற்கும் விருதாசலத்தில் கோஷ்டி மோதல் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. அதில் தென்றல் முருகன் என்பர் தாக்கப்பட்டு காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து ரஜினிகாந்த் இரண்டு நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிக்கையில், ஒழுங்கு நடவடிக்கை குழுவால் எடுக்கப்பட்ட அனைத்து விஷயங்களும் தன்னுடைய கவனத்திற்கு வந்த பின்னரே எடுக்கப்பட்டதாக கூறியிருந்தார். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட தென்றல் முருகன், ஓ.எல் பெரியசாமி உள்ளிட்ட பத்து பேரும் ரஜினிகாந்திற்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்நிலையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் வழக்கின் மீதான தீர்ப்பு நேற்று வெளியாகியுள்ள நிலையில், இடைத்தேர்தல் வந்தால் அதை சந்திக்கலாமா? என ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் மன்றத்தில் சேர்த்துக்கொள்ளவது குறித்தும் ஆலோனை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.