“ரஜினி ஒரு தார்மீக சக்தியாக விளங்குவார்” - ப.சிதம்பரம்
ரஜினி ஒரு தார்மீக சக்தியாக விளங்குவார் என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய ப.சிதம்பரம், “ரஜினியுடன் இணக்கமாகப் பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய அரசியல் ஆவல் உள்ளது. 2021 ஆண்டையும் அதற்குப் பிறகு, 2024ஆம் ஆண்டையும் நான் எதிர்நோக்குகிறேன்.
ரஜினி ஒரு தார்மீக சக்தியாக விளங்கியவர், விளங்குபவர், விளங்குவார் என்பதில் எனக்கு ஐயமில்லை. 1996ஆம் ஆண்டைப் பல முறை நினைத்துப் பார்த்து நான் மகிழ்ச்சியடைபவன்” என்றார்.
உடல்நிலையை காரணம் காட்டி கட்சி தொடங்கப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ள நிலையில் ப.சிதம்பரம் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த 1996 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் அதிமுகவுக்கு எதிராகவும் திமுக கூட்டணிக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்திருந்தார். அன்று திமுக கூட்டணியில் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் இடம்பெற்றிருந்தது. ப.சிதம்பரமும் காங்கிரஸில் இருந்து விலகி மூப்பனாரும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.