"ரஜினி ஏப்ரல் 1-ல் தான் அரசியல் பிரவேசத்தை அறிவிப்பார்!" - ஈவிகேஎஸ் இளங்கோவன்

"ரஜினி ஏப்ரல் 1-ல் தான் அரசியல் பிரவேசத்தை அறிவிப்பார்!" - ஈவிகேஎஸ் இளங்கோவன்
"ரஜினி ஏப்ரல் 1-ல் தான் அரசியல் பிரவேசத்தை அறிவிப்பார்!" - ஈவிகேஎஸ் இளங்கோவன்

"ரஜினி ஏப்ரல் 1ஆம் தேதி அன்று அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பார். ஏன் என்றால் அன்றுதான் முட்டாள்கள் தினம்" என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

கோபிசெட்டிபாளையத்தில் இன்று செய்தியாளர்களிடம் ரஜினி மற்றும் பாஜகவின் அரசியல் பற்றி கருத்து கூறிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், “ரஜினி ஏப்ரல் 1ஆம் தேதி அன்று அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பார், ஏன் என்றால் அன்றுதான் முட்டாள்கள் தினம். எல்லோராலும் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிவிட முடியாது, சிவாஜியே மக்களை கணக்கு போடதெரியாமல் தேர்தலில் தோல்வியை சந்தித்தார். ஆனால், எம்ஜிஆருக்கு நிகரான  செல்வாக்கை கொண்டவர் சிவாஜி. நாட்டில் பொருளாதாரம் வளர்ந்து கொண்டுள்ளது என்பது தவறு, மோடியின் தாடிதான் வளர்ந்து கொண்டுள்ளது.  

தமிழகத்தில் பாஜக பல கோடிகளை செலவு செய்து வருகிறது. எத்தனை கோடி செலவு செய்தாலும் பாஜகவை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சிலிண்டர் விலை தற்போது 100 ரூபாய் உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை உலக சந்தையில் விலை குறைந்தாலும், இந்தியாவில் தான் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

மோடி அரசு விவசாயிகளுக்கு துரோகம் செய்து, பணக்காரர்களுக்காக  வேளாண் சட்டங்களை  கொண்டுவந்துள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி, அதிமுகவின் வெற்றியை கண்டிப்பாக பாதிக்கும்” என்றார்.

திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர் “234 தொகுதிகளும் கேட்க வேண்டும் என்றுதான் எங்களுக்கும் ஆசை. ஆனால் அது சாத்தியமில்லை. திமுகவுடன் சுமூகமாக பேச்சு வார்த்தை நடத்தி, வேண்டிய தொகுதிகளை பெற்றுக்கொள்வோம்” என்றார் அவர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com