“அதிமுக, திமுக கூறியது குறித்து கருத்து கூற விரும்பவில்லை” - ரஜினி
தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இல்லை என அதிமுக, திமுக கூறியது குறித்து கருத்து கூறவிரும்பவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டருகே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், தமிழகத்தில் இன்னும் சரியான, ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது எனத் தெரிவித்தார்.
இதனிடையே தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை என்று விக்கிரவாண்டியில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ரஜினிகாந்துக்கு பதிலளிக்கும் விதமாக பேசினார். இதேபோல், தமிழக அரசியல் வெற்றிடத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே நிரப்பிவிட்டதாக நடிகர் ரஜினிகாந்துக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் பதிலளித்திருந்தார்.
இந்நிலையில், ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இல்லை என அதிமுக, திமுக கூறியது குறித்து கருத்து கூறவிரும்பவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது இதனைத் தெரிவித்தார்.