"கட்சி தொடங்கவில்லை; அரசியலுக்கு வரமுடியவில்லை, மன்னியுங்கள்!" - ரஜினி திடீர் அறிவிப்பு

"கட்சி தொடங்கவில்லை; அரசியலுக்கு வரமுடியவில்லை, மன்னியுங்கள்!" - ரஜினி திடீர் அறிவிப்பு
"கட்சி தொடங்கவில்லை; அரசியலுக்கு வரமுடியவில்லை, மன்னியுங்கள்!" - ரஜினி திடீர் அறிவிப்பு

வரும் 31-ஆம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்றுக்கூறிய ரஜினி தற்போது ‘கட்சி ஆரம்பிக்கவில்லை’ என்று அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

இதுதொடர்பாக இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பில், "கட்சி தொடங்கி அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். என்னை நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை. கட்சி ஆரம்பிப்பேன் என்று நம்பிய ரசிகர்கள், மக்களுக்கு என் முடிவு ஏமாற்றம் தரும். தேர்தல் அரசியலுக்கு வராமால் என்னால் என்ன செய்யமுடியுமோ அதனை செய்வேன்" என்று தெரிவித்துள்ளார். அவர், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மூன்று பக்க அறிக்கையின் முழு விவரம்:

“என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கு எனது அன்பான வணக்கம். ஜனவரியில் கட்சி தொடங்குவேன் என்று அறிவித்து மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி ’அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஹைதரபாத் சென்றேன். கிட்டத்தட்ட 120 பேர் கொண்ட படக்குழுவினருக்கு கொரோனா பரிசோதனை செய்து ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி முகக்கவசம் அணிவித்து மிகவும் ஜாக்கிரதையாக படப்பிடிப்பை நடத்தி வந்தோம். இவ்வளவு கட்டுப்பாடுகள் போட்டும் நான்கு பேருக்கு கொரோனா இருக்கிறது என்று தெரிய வந்தது. உடனே இயக்குநர் படப்பிடிப்பை நிறுத்தி எனக்கும் கொரோனா சோதனை செய்வித்தார்.எனக்கு கொரோனா நெகட்டிவ் வந்தாலும் ரத்தக் கொதிப்பில் ஏற்றத்தாழ்வு இருந்தது. மருத்துவ ரீதியாக எக்காரணத்தைக் கொண்டும் எனக்கு ரத்தக் கொதிப்பில் ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது. அது எனது மாற்று சிறுநீரகத்தை பாதிக்கும். அதனால், மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி அவர்களின் மேற்பார்வையில் மருத்துவமனையில் இருக்க நேரிட்டது.

என் உடல்நிலைக் கருதி தயாரிப்பாளர் கலாநிதி மாறன் படப்பிடிப்பை ஒத்தி வைத்தார். இதனால், பலபேருக்கு வேலை வாய்ப்பு இழப்பு , பலகோடி ரூபாய் நஷ்டம். இவை அனைத்துக்கும் எனது உடல்நிலைதான் காரணம். இதனை ஆண்டவன் எனக்கு கொடுத்த எச்சரிக்கையாக பார்க்கிறேன். 

நான் கட்சி ஆர்மபித்தால் ஊடகங்கள், சமூக வலைதளங்களில் மட்டுமே பிரச்சாரம் செய்தால் மக்கள் மத்தியில் நான் நினைக்கும் அரசியல் எழுச்சியை உண்டாக்கி தேர்தலில் பெரிய வெற்றியை பெற முடியாது. இந்த யதார்த்தத்தை அரசியல் அனுபவம் வாய்ந்த எவரும் மறுக்கமாட்டார்கள்.நான் மக்களை சந்தித்து கூட்டங்களைக் கூட்டி பிரச்சாரத்திற்கு சென்று ஆயிரக்கணக்கான ஏன் லட்சக்கணக்கான மக்களை சந்திக்க வேண்டியிருக்கும். 120 பேர் கொண்ட குழுவிலேயே கொரோனா பதிப்பு ஏற்பட்டு நான் மூன்று நாட்கள் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க நேர்ந்தது. இப்போது இந்த கொரோனா உருமாறி புது வடிவம் பெற்று இரண்டாவது அலையாக வந்துகொண்டிருக்கிறது.

தடுப்பூசி வந்தால்கூட நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மருந்துகளை சாப்பிடும் நான், இந்த கொரோனா காலத்தில் மக்களை சந்தித்து பிரச்சாரத்தின்போது என் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் என்னை நம்பி என்கூட வந்து என்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல சிக்கல்களையும் சங்கடங்களையும் எதிர்கொண்டு மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களை சந்திக்க நேரிடும். என் உயிர் போனாலும் பரவாயில்லை. நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேன். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்போது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு  பேர் நாலு விதமாக என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என்கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.

ஆகையால், நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும்தான் தெரியும். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். என்னை மன்னியுங்கள்.

மக்கள் மன்றத்தினர் கடந்த மூன்று ஆண்டுகளாக என் சொல்லுக்குக் கட்டுப்பட்டு ஒழுக்கத்துடனும் நேர்மையுடனும் கொரோனா காலத்திலும் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்திருக்கின்றீர்கள். அது வீண் போகாது. அந்தப்புண்ணியம் என்றும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றும். கடந்த நவம்பர் 30 ஆம் தேதி நான் உங்களை சந்தித்தபோது நீங்கள் எல்லோரும் ஒரு மனதாகஉங்கள் உடல்நலம் தான் எங்களுக்கு முக்கியம். நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் எங்களுக்கு சம்மதமேஎன்று சொன்ன வார்த்தைகளை என் வாழ்நாளில் மறக்கமாட்டேன். நீங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பிற்கும் பாசத்திற்கும் தலை வணங்குகிறேன். ரஜினி மக்கள் மன்றம் என்றும் போல செயல்படும்.

மூன்று ஆண்டுகளாக எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் தொடர்ந்து என்னை ஆதரித்து ’முதலில் உங்க உடல் நலத்தை கனியுங்க, அதுதான் எங்களுக்கு முக்க்யம்’ என்று அன்புடன் கூறிய மதிப்பிற்குரிய தமிழருவி மணியன் ஐயா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிய தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒரு பெரிய கட்சியில் பொறுப்பான பதவியிலிருந்து விலகி என்கூட வந்து பணியாற்ற சம்மதித்த மரியாதைக்குரிய அர்ஜூன மூர்த்தி அவர்களுக்கும் நன்றிகூற நான் கடமைப்பட்டுள்ளேன். தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்ய முடியுமோ அதை நான் செய்வேன்.  நான் உண்மையை பேச என்றுமே தயங்கியதில்லை.

உண்மையையும் வெளிப்படை தன்மையையும் விரும்பும் என் நலத்தில் அக்கறையுள்ள என்மேல் அன்புகொண்ட என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் என்னுடைய இந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று அறிக்கையில் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ரஜினியின் இந்த திடீர் அறிவிப்பு, தமிழக அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com