”6, 7 வயது சிறுவர்களால் ஆட்சியை இழந்தோம்” - திமுக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு
சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் வென்று அக்கட்சியின் தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்றிருக்கிறார். இதையடுத்து, சமூக வலைதளங்கள் குறிப்பாக, இஸ்டாகிரம் செயலி மூலம் மக்களை ஏமாற்றி தவெக வெற்றி பெற்றதாக திமுகவினர் விமர்சித்து வருகின்றனர். இந்தசூழலில் தான், திமுக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், தவெக வெற்றிக்கான காரணங்களாக சிலவற்றை சுட்டிக்காட்டியிருப்பது அரசியல் களத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேருந்து நிலையம் பகுதியில் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் வாக்காளருக்கு நன்றி தெரிவித்தார். அப்போது பேசிய அவர், ஆறு, ஏழு மற்றும் எட்டு வயது சிறுவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களது பெற்றோர் தவெகவுக்கு வாக்களித்ததால் திமுக ஆட்சியை இழந்ததாகவும், ஜோசப் விஜய் என்ற பெயரை பயன்படுத்தி ஒட்டுமொத்த கிறிஸ்தவ வாக்குகளையும் பெற்ற அவர் பட்டியல் இன மக்களின் வாக்குகளை ஏமாற்றி வெற்றி பெற்றதாகவும் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து, தவெகவுக்கு வாக்களித்த மக்கள் தற்போது அனுபவிக்கிறார்கள் என்றும் யார் ஆட்சிக்கு வந்தால் வேலை செய்வார்கள்.. யார் வேலை செய்ய மாட்டார்கள் என்று மக்கள் உணர வேண்டும் எனவும் பேசியிருக்கிறார்.

