தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை
தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மற்றும் கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், நெல்லை மற்றும் தூத்துக்குடியில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையைப் பொருத்தவரை மாலை பொழுதில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலையாக 39 டிகிரி செல்சியஸ் முதல் குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலையும் பதிவாகக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது மட்டுமல்லாமல் கேரள கடற்கரை, கர்நாடக கடற்கரை, இலட்சத்தீவு உள்ளிட்டப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கிமீ இருந்து 55 கிமீ வேகத்தில் வீச வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் 2 நாட்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.