தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலை 7 மணியளவில் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையைக் கடந்து, தற்போது கடலோர ஆந்திராவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலைகொண்டுள்ளது. இந்நிலையில், நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல், மன்னார் வளைகுடா, கேரளா மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.