தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 17ஆம் தேதி பெய்த அதிகன மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது இதில் கோரம்பள்ளம் குளம் உடைந்து தூத்துக்குடி நகர் முழுவதும் வெள்ளைக்கடானது இதனால் சுமார் 10 லட்சம் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.
இந்த நிலையில், வெள்ளம் பாதித்த மக்களுக்கு ஆறுதல் கூறவும் நிவாரணப் பொருட்கள் வழங்கவும் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார்.
அங்கு செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை பேசுகையில்...
”தென் மாவட்டத்தில் ஏற்பட்ட மழையால் தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகள் இன்னும் வெள்ளக்கடாக காட்சியளிக்கிறது. இதைப்பற்றி தமிழக அரசு கவலைப்படாதது ஏன் என தெரியவில்லை. மழை நீரை சேமிப்பதற்கோ, மழை நீரை வருங்காலத்திலும் விவசாயிகள் பயன்படுத்துவதற்கோ அரசு என்ன முயற்சி எடுத்தது.
மத்திய அரசை குறை கூறுவதை விட்டு விட்டு மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். மக்கள் வெள்ளத்தில் தங்களது வாழ்க்கையை இழந்திருக்கக் கூடிய சூழலில் முதலமைச்சர் இந்த மாவட்டத்தில் செலவழித்த நேரம் எவ்வளவு?. முதலமைச்சர் தூத்துக்குடியில் வெள்ளப் பகுதியை எங்கு பார்வையிட்டார் எத்தனை மணி நேரம் செலவழித்தார் என மக்களிடம் நான் கேட்கிறேன்.
தென் மாவட்ட மக்களை மாற்றான் தாய் மனப்பன்மையுடன் தமிழக அரசு நடத்துகிறது. தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பதோடு மட்டுமன்றி அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையானதை செய்ய வேண்டும்” என கூறினார்.
இதைத் தொடர்ந்து கார் மூலம் மடத்தூர் அருகில் உள்ள முருகேசன் நகர், பொட்டல் காடு, ஏரல் தென்திருப்பேரை ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிவிட்டு திருநெல்வேலிக்குச் சென்றார்.
இந்நிலையில், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் விமர்சனத்துக்கு பதிலளித்துள்ள அமைச்சர் சேகர்பாபு, “ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஆளுநர் பணியை மட்டும் பார்த்தால் போதும். பாஜகவின் செய்தி தொடர்பாளராக செயல்பட வேண்டாம். துமிழகத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடுவதுதான் அவரது எதிர்கால திட்டம். ஏற்கெனவே தமிழக மக்கள் அவருக்கு தோல்வியை பரிசாக கொடுத்தனர். அதனால் மீண்டும் தோல்வியைதான் கொடுப்பார்கள்” என்று தெரிவித்தார்.