2017-ஆம் ஆண்டுக்கான புதிய தலைமுறையின் சக்தி விருதுகள்
தடைகளைத் தகர்த்து சாதிக்கும் பெண்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, புதியதலைமுறை ஆண்டுதோறும் சக்தி விருதுகளை வழங்கி வருகிறது. 2017-ம் ஆண்டுக்கான புதியதலைமுறை சக்தி விருதுகள் 7 பிரிவுகளில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.
திறமைக்கான சக்தி விருது செஸ் வீராங்கனை ஆர்த்தி ராமசுவாமிக்கு வழங்கப்பட்டது. இவ்விருதை முதல் செஸ் பெண் கிராண்ட் மாஸ்டரான விஜயலட்சுமி வழங்கினார்.
தலைமைக்கான சக்தி விருது தேசிய பங்குசந்தையின் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது. இவ்விருதை எஸ்.ஆர்.எம் குழும தலைவர் பாரிவேந்தர் வழங்கினார்.
கருணைக்கான சக்தி விருது ஆதரவற்ற 600 பசுக்களை வளர்த்துவரும் மருத்துவர் சாதனா ராவுக்கு வழங்கப்பட்டது. இவ்விருதை ஜெயஸ்ரீ ரவீந்திரன் மற்றும் மனோகரன் ஆகியோர் சேர்ந்து வழங்கினர்.
புலமைக்கான சக்தி விருது அக்னி 5 செயற்கைகோள் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்த சங்கரி சந்திரசேகரனுக்கு வழங்கப்பட்டது. இவ்விருதை சிவகாமி ஐஏஎஸ் மற்றும் ஃபோர்டு நிறுவனத்தை சேர்ந்த பாலாஜி தரணிதரன் ஆகியோர் சேர்ந்து வழங்கினர்.
துணிவுக்கான சக்தி விருது தண்டுவட பாதிப்புக்கு உள்ளானோரை பராமரிக்கும் சோல் ஃப்ரீ அமைப்பின் தலைவரான ப்ரீத்தி சீனிவாசனுக்கு வழங்கப்பட்டது. இவ்விருதை புதிய தலைமுறை குழும தலைவர் சத்யநாராயணன் வழங்கினார். மேலும் சோல் ஃப்ரீ அமைப்புக்கு 5 லட்சம் ரூபாய் நன்கொடையையும் சத்யநாராயணன் வழங்கினார்.
ஆளுமை துணிவுக்கான சக்தி விருது அமுதா ஐஏஎஸ்ஸூக்கு வழங்கப்பட்டது. இவ்விருதை புதிய தலைமுறை குழும தலைவர் சத்யநாராயணனுடன் வழக்கறிஞர் சுதாவும் இணைந்து வழங்கினார்.
சாதனை சக்தி விருது முனைவர் வசந்திதேவிக்கு வழங்கப்பட்டது. இவ்விருதை இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த வாசுகி வழங்கினார்.