செய்தியாளர் : முத்துப்பழம்பதி
புதுக்கோட்டை திருவப்பூர் முத்து மாரியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவிற்கு தனது குடும்பத்துடன் வந்திருந்த விராலிமலை கீழ தேரடி வீதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் சாமி தரிசனம் செய்துவிட்டு, தனது மனைவி சுஸ்மித்ரா, மகள் ஹரிணியா ஆகியோரை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சென்ற போது, புதுக்கோட்டையிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில், சுப்பிரமணி அவரது நான்கு வயது மகள் ஹரிணியா ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த சுஸ்மித்ரா உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.