கனிமவள கொள்ளையை தடுக்க நினைத்த புதுக்கோட்டை ADMK நிர்வாகி கொலை.. அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கனிம வள கொள்ளையை தடுக்க முயன்றவர் திடீரென சாலை விபத்தில் மரணமடைந்த சம்பவம் திருமயம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இறந்தவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மனைவி திருமயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். யார் அவர்? என்ன நடந்தது? பார்க்கலாம்...
கனிமவளக் கொள்ளைக்கு எதிராக, அக்கறையாகவும் ஆவேசமாகவும் பேசியவர், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெங்களூரு கிராமத்தைச் சேர்ந்த ஜெகபர் அலி. அதிமுகவின் முன்னாள் ஒன்றிய கவுன்சிலரான இவர், திருமயம் பகுதியில் அனுமதியின்றி செயல்படும் கல்குவாரிகள் குறித்து தாசில்தாரிடம் புகார் அளித்திருந்தார்.
அது கசிந்துவிட்டதாக கடந்த 13 ஆம் தேதி அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார் ஜெகபர் அலி. அதில் “திருமயம் அருகே துளையானூர் கிராமத்தில் ஏராளமான சட்டவிரோத கல்குவாரிகள் உள்ளன. அதில் அதிக அளவில் கனிம கொள்ளை நடக்கிறது. குறிப்பாக ஆர்ஆர் குரூப் என்ற நிறுவனம் அதிக அளவில் கனிம கொள்ளையில் ஈடுபகிறது.
70 ஆயிரம் டாரஸ் லாரி அளவிற்கு வெட்டப்படும் பாறை கற்களை அவர்கள் பதுக்கி வைத்துள்ளனர். இது குறித்து திருமயம் வட்டாட்சியருக்கு புகார் தெரிவித்தும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் தகவலை கசிய விட்டதால் சம்பந்தப்பட்ட நபர்கள் பதிக்கி வைத்திருந்த கற்களை மீண்டும் குவாரியில் கொண்டு சென்று கொட்டுகின்றனர். உடனடியாக மாவட்ட ஆட்சியர் கனிமக் கொள்ளையை தடுக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த வெள்ளியன்று, பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு திரும்பியபோது வாகனம் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து தன் கணவரின் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவியதாகவும், அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் ஜெகபர் அலியின் மனைவி மரியம்.
மரியம் அளித்த புகாரின் பேரில், குற்றச்சாட்டுக்கு உள்ளான நிறுவனங்களின் உரிமையாளர்கள் ராசு, ராமையா, லாரி உரிமையாளர் முருகானந்தம் மற்றும் அவரது ஓட்டுநர் முருகேசன் ஆகியோர் மீது, திருமயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். தொடர்ந்து முருகானந்தம் உள்பட 4 பேரை கைது செய்துள்ளனர் காவல்துறையினர். தற்போது நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டும் உள்ளனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், சட்டவிரோத கல்குவாரி தொடர்புடைய தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள், திட்டமிட்டு சாலை விபத்தை ஏற்படுத்தி, ஜெகபர் அலியைக் கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. இந்த விவகாரத்தில் வேறு யாரேனும் சம்பந்தப் பட்டிருக்கிறார்களா என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர் ஜெகபர் அலி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் புகார் அளித்தவர்களை காட்டிக் கொடுத்து மிக மோசமான முன்னுதாரணத்தை திமுக அரசு ஏற்படுத்தியுள்ளது. ஜெகபர் அலியின் இறப்புக்கு நீதி வேண்டும்.
கனிமவளக் கொள்ளை மட்டுமின்றி அவர் அளித்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் இக்கொலைக்கு பொறுப்பு. உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலையின் பின்னணியில் உள்ள உண்மைக் குற்றவாளிகளை விட்டுவிட்டு, லாரி ஓட்டுநர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கை மடைமாற்றலாம் என்ற எண்ணம் இருந்தால் தமிழக அரசு மோசமான விளைவை எதிர்கொள்ள நேரிடும்” என அண்ணாமலை எச்சரித்துள்ளார்.
மற்றொருபக்கம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள பதிவில், “ஜெகபர் அலி மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். தமிழகத்தில் மணல், கற்கள் உள்ளிட்ட கனிமவள கொள்ளையை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்தில் அரசு அதிகாரிகள் பலரும் சம்பந்தப்பட்டிருக்கலாம்” என குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் திருமயம் தெற்கு ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளரும், முன்னாள் அஇஅதிமுக ஒன்றிய குழு உறுப்பினர், புதுக்கோட்டை மாவட்ட அமைச்சூர் கபடி கழக செயலாளரும், சமூக ஆர்வலருமான திரு.ஜெபகர் அலி அவர்கள், சமூக விரோதிகளால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
கனிமவளக் கொள்ளை தொடர்பாக, திருமயம் வட்டாட்சியரைச் சந்தித்து புகார் செய்து, 15 நாட்களுக்கும் மேலாக ஆகியும், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும், மாவட்ட ஆட்சியரிடமே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது அவரைப் சமூக விரோதிகள் லாரி ஏற்றி படுகொலை செய்திருக்கிறார்கள் என்ற செய்தி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்தக் கொலைக் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கை திசை திருப்பி வருகிறது இந்த அரசு.
கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு. ஜெகபர் அலி அவர்கள் இறப்புக்கு நீதி வேண்டும். கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்திற்குப் பொறுப்பு. உரிய விசாரணை நடத்தி, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றுள்ளார்.