புதுக்கோட்டை: சினையாக இருக்கும் பசுமாட்டிற்கு வளைகாப்பு நடத்திய கிராம மக்கள்
புதுக்கோட்டை அருகேயுள்ள திருமயத்தில் சினையாக இருக்கும் பசுமாட்டிற்கு ஊரார் ஒன்றுகூடி வளைகாப்பு விழா நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மூங்கித்தாம்பட்டி கிராமத்தில் மீனாட்சி சுந்தரம் என்பவர் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் சினையாக உள்ள ஒரு பசுமாட்டிற்கு பெண்கள் கருவுற்று இருக்கும்போது, பிறந்த வீட்டில் செய்யும் வளைகாப்பு போல் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து இன்று அந்த பகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு கருவுற்றிருந்த பசு மாட்டை அழைத்து வந்தனர்.
பின்னர் பசுமாட்டிற்கு வளைகாப்பு நடத்த கிராம மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்த மீனாட்சி சுந்தரம் மற்றும் அவரது குடும்பத்தினர் விழாவுக்கு வந்த அனைவரையும் சந்தனம் குங்குமம் கொடுத்து வரவேற்று பின்னர், பசுமாட்டை அலங்கரித்து பெண்களுக்கு வளைகாப்பு போடுவதைப் போல் மாட்டிற்கும் ஒவ்வொருவராகச் சென்று மாட்டின் கொம்பில் வளையல்களை மாட்டி வளைகாப்பு நடத்தினர். இதையடுத்து வளைகாப்பு விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் உணவும் பரிமாறப்பட்டது.