புதுக்கோட்டை மச்சுவாடியைச் சேர்ந்த மகேஷ்வரன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் நேற்று இரவு வீட்டுக்கு சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது புதுக்கோட்டை நகர காவல் நிலையம் அருகே அவர் விபத்துக்குள்ளாகி காயமடைந்து கீழே விழுந்துள்ளார். அப்போது அவரை புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் பணியாற்றும் மகாராஜன் என்ற காவலர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதையடுத்து மகேஸ்வரன் வந்த இருசக்கர வாகனத்தில் இருந்த பையில் ரூ.4 லட்சம் பணம் இருந்ததை அறிந்த மகாராஜான், அதனை பத்திரமாக எடுத்து வைத்ததோடு இதுகுறித்து மகேஸ்வரனின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவண சுந்தர் முன்னிலையில் மகேஷ்வரனின் மனைவி ரெத்னாவதியிடம் அந்த பணத்தை காவலர் மகாராஜன் ஒப்படைத்தார்.
இதைத் தொடர்ந்து காவலர் மகாராஜனின் நேர்மையான செயல், மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது.