``பீகார் முதல்வரின் நிலை பாஜக-வால் ரங்கசாமிக்கும் ஏற்படும்”-புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர்

``பீகார் முதல்வரின் நிலை பாஜக-வால் ரங்கசாமிக்கும் ஏற்படும்”-புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர்
``பீகார் முதல்வரின் நிலை பாஜக-வால் ரங்கசாமிக்கும் ஏற்படும்”-புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர்

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இரண்டாவது முறையாக தமிழில் உரையாற்றினார் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன். அப்போது ஆளுநர் உரையின் போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை அணிந்து வந்த திமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

புதுச்சேரியில் 15வது சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டம் இன்று காலை தொடங்கியது. இந்தாண்டின் முழுமையான முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. பேரவை மண்டபத்திற்கு வந்த ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு காவல் துறையின் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. பேரவை தலைவர் செல்வம்,செயலர் முனுசாமி ஆகியோர் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை பேரவை மண்டபத்திற்கு அழைத்து சென்றார். தமிழ்தாய் வாழ்த்து மற்றும் திருக்குறள் உரையுடன் ஆளுநர் தமிழிசை தமிழில் உரை நிகழ்த்தினர். இது இவருக்கு இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தனது உரையின் போது, `புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஆண்டை விட தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளதாக ஆளுநர் உரையில் தமிழிசை பெருமிதம் கடந்த ஆண்டு ரூ.10,416 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்ஜெட்டில் 9,709 கோடி என 94 சதவீதம் செலவிடப்பட்டுள்ளது’ என ஆளுநர் உரையில் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பேரவைக்குள் வந்த திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். ஆளுநர் உரை தொடங்கியவுடன் திமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து “புதுச்சேரி மாநிலத்திற்கு துணை நிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். தமிழகத்தைச் சேர்ந்தவர், தமிழ் பேசக்கூடியவர் என்பதால் மத்திய அரசிடம் புதுச்சேரி மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பார் என்று எதிர்பார்த்தோம். அதற்காக ஓராண்டு காத்தும் இருந்தோம். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அடிக்கடி டெல்லி சென்று பிரதமர், மத்திய நிதி அமைச்சர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்து பேசிவந்தார்.

அதனால் புதுச்சேரிக்கு கூடுதல் நிதி கிடைக்கும், மூடப்பட்ட மில்கள், அரசு நிறுவனங்கள் திறக்கப்படும், சம்பளம் தரப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. தற்போது முதல்வரும் பிரதமரை சந்தித்து பேசி, கூடுதல் நிதி கேட்டும், மாநில அந்தஸ்து கேட்டும் மனு அளித்துவிட்டு வந்துள்ளார். பிரதமரை முதல்வர் சந்தித்த பின்னர் புதுச்சேரிக்கு எவ்வளவு நிதி கூடுதலாக தரப்பட்டுள்ளது?” என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் கிடைக்காததால் சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் சிவா தலைமையில் திமுக - காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் சிவா, “புதுச்சேரிக்கு போதிய நிதி பெற்றுத் தராமல், மாநில வளர்ச்சிக்கு தடையாக அரசியல் செய்துகொண்டிருக்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உடனடியாக பதவி விலக வேண்டும்” என்று வலியுறுத்தி, “பீகார் மாநில முதலமைச்சராக இருந்த நிதிஷ்குமார் போன்ற நிலைமை போன்று, பாஜகவால் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கும் ஏற்படும். நிதிஷ்குமார் போன்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் பதவி விலக வேண்டும்” என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com