புதுச்சேரி: பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆட்டோ ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை
புதுச்சேரியில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கவும் புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி அண்ணாசாலை அருகே கடந்த 2019 ஆம் ஆண்டு அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்டில், ஆட்டோ ஓட்டுநர் காக்குப்பத்தைச் சேர்ந்த ராஜா என்ற ராஜசேகர் (38) நின்றிருந்தார், அப்போது அவ்வழியாக வந்த 13 வயது சிறுமியை வீட்டில் விடுவதாக அழைத்துச் சென்று காக்குப்பத்தில் உள்ள தனது வீட்டில் 3 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியுள்ளார்.
இந்நிலையில், 4 நாட்களுக்குப் பிறகு சிறுமியை விடுவித்து வெளியில் சொல்ல கூடாது என மிரட்டிச் சென்றுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில்; போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆட்டோ டிரைவர் ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்,
இவ்வழக்கு கடந்த 2 ஆண்டுகளாக புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி செல்வநாதன் முன்பாக விசாரணை நடந்து வந்தது. இதையடுத்து விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது, அதில், ராஜா என்ற ராஜசேகருக்கு பத்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 12 ஆயிரம் ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடு தரவும் நீதிபதி உத்தரவிட்டார்.

