வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் இல்லாததால் வேடந்தாங்கல் வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏறபட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ளது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். பிரசித்தி பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும். அப்போது ஆஸ்திரேலியா, மியான்மர், பர்மா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வர்ணநாரை, அரிவாள் மூக்கன், சாம்பல் நாரை,வெள்ளை நிற அரிவாள் மூக்கன் ,கூழைகடா, முக்குளிப்பான், மிளிர் உடல் அரிவாள் மூக்கன், பாம்புதாரா, சிறவி உள்ளிட்ட 24 வகையான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வேடந்தாங்கல் வந்து செல்வது வழக்கம். சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வருவது வழக்கம்.
இந்நிலையில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துபோனதால் வேடந்தாங்கல் ஏரியில் 30 சதவீதம் நீர் கூட நிரம்பவில்லை. இதனால் மூவாயிரத்துக்கும் குறைவான பறவைகள் மட்டுமே வந்தன. ஆகவே சுற்றுலா வருவோரின் எண்ணிக்கையும் குறைந்தது. இந்த சூழலில் தற்போது ஏரியில் தண்ணீர் வேகமாக வற்றி வருவதால் நூற்றுக்கணக்கான பறவைகள் மட்டுமே உள்ளன. இதனால் பல்வேறு இடங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பறவைகள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதனால் பறவைகள் சரணாலயத்தை மூட வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.