சிஏஏ தொடர்பான வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் - முதல்வர் பழனிசாமி
குடியுரிமை சட்ட திருத்தத்தினால் சிறுபான்மையினருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் அவர்களை பாதுகாப்பத்தில் அரசு உறுதியாக உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்லாமியர்களின் குடியுரிமை பாதிக்கப்படும் என சிலர் தொடர்ச்சியாக வதந்திகளை பரப்பி வருவதாகக் கூறியுள்ளார். இந்த வதந்திகளை நம்ப வேண்டாம் என தமிழக மக்களை கேட்டுக்கொண்ட அவர், இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தனது டெல்லி பயணத்தின்போது பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரிடம் இக்கோரிக்கையை நேரில் வலியுறுத்தியதாகவும் முதல்வர் பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார். எனவே பொதுமக்கள் தவறான பிரசாரங்களுக்கு செவி சாய்க்காமல் அமைதி காக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்