பப்ஜி மதன் மீதான குண்டாஸை உறுதிசெய்தது அறிவுரைக்கழகம்

பப்ஜி மதன் மீதான குண்டாஸை உறுதிசெய்தது அறிவுரைக்கழகம்
பப்ஜி மதன் மீதான குண்டாஸை உறுதிசெய்தது அறிவுரைக்கழகம்

பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டத்தை அறிவுரைக் கழகம் உறுதி செய்துள்ளது

தன்னை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பப்ஜி மதன் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசும், சென்னை காவல் ஆணையரும் பதிலளிக்கும்படி கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதேநேரம் தன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை நீக்கக்கோரி பப்ஜி மதன் அறிவுரைக் கழகத்தில் வாதாடியிருந்தார்.

இதுதொடர்பாக கடந்த 6-ஆம் தேதியும் அறிவுரைக்கழகத்தில் விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து அறிவுரைக் கழக நீதிபதிகள் ரகுபதி, ராமன், மாசிலாமணி ஆகியோர் முன்னிலையில் இன்று இதுதொடர்பான விசாரணை நடந்தது. அப்போது, பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டத்தை அறிவுரைக் கழகம் தற்போது உறுதி செய்துள்ளது.

முன்னதாக, மதன் மற்றும் 'டாக்சிக் மதன் 18 பிளஸ்' என்ற யூ டியூப் சேனல்கள் மூலமாக பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பப்ஜி மதன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் ஜூன் 18-ம் தேதி தர்மபுரியில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஏராளமான புகார்கள் வந்ததால், அவரை சைபர் சட்ட குற்றவாளி எனக் கூறி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர், ஜூலை 5 ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, மதன் குமார் என்கிற மதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், தனது செயல்பாடுகளால் மாநிலத்தின் சட்டம் – ஒழுங்குக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், பப்ஜி விளையாடுவது ஒரு போதும் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் செயல் எனக் கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள், மனதைச் செலுத்தாமல் தன்னை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், தான் விளையாடியது இந்திய அரசால் தடை செய்யப்படாத கொரிய பப்ஜி விளையாட்டு எனவும் கூறியுள்ளார். தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் தொழில் போட்டியாளர்கள், தனது வீடியோவை எடிட் செய்து பதிவேற்றம் செய்துள்ளதாகவும், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்கள் தனக்கு முறையாக வழங்கப்படவில்லை எனவும் மனுவில் தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com