ஜெ. மருத்துவ அறிக்கை: சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட்டான #PTMegaBreaking
மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது, அவரது உடல்நிலை என்ன நிலையில் இருந்தது என்பது குறித்த மருத்துவ அறிக்கையை புதிய தலைமுறை இன்று ஆதாரத்துடன் #PTMegaBreaking என்ற ஹேஷ்டேக் மூலம் செய்தி வெளியிட்டது. இதனையடுத்து #PTMegaBreaking என்கிற ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட்டாக மாறியுள்ளது.
காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அங்கு 75 நாட்கள் சிகிச்சை பெற்ற அவர், டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி உயிரிழந்தார். ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக தொடர்ச்சியாக புகார் எழுந்துவரும் நிலையில், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது என்ன நிலையில் இருந்தார் என்ற கேள்விக்கும் விடை கிடைக்காமலேயே இருந்தது.
இதனை அறிந்து கொள்ளும் விதமாக புதிய தலைமுறை கள ஆய்வில் ஈடுபட்டு, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில், அவரின் உடல்நிலை என்ன நிலையில் இருந்தது என்பது குறித்த மருத்துவ அறிக்கையை ஆதாரத்துடன் #PTMegaBreaking ஆக இன்று செய்தி வெளியிட்டது. புதிய தலைமுறையின் இந்த முயற்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து சமூக வலைத்தள பக்கங்களிலும் இச்செய்தி வேகமாக பரவியது. இந்த செய்தியை தொடர்ந்து பலரும் ஷேர் செய்து வருவதால் சமூக வலைத்தளங்ளில் PTMegaBreaking என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்ட்டாக மாறியுள்ளது.