நாமக்கல்லில் உள்ள பி.எஸ்.கே கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் வீடு மற்றும் அலுலகங்களில் 3 ஆவது நாளாக தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான விளங்கிவரும் பி.எஸ்.கே கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் நேற்று முந்தினம் முதல், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் காளிப்பநாயக்கன் பட்டி அடுத்த நடுக்கோம்பையிலுள்ள கட்டுமான நிறுவன உரிமையாளர் பெரியசாமி இல்லம் மற்றும் அவரது அலுவலகம், நாமக்கல்லிலுள்ள பெரியசாமியின் உறவினர் செல்வகுமார் அலுவலகம் ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
1983 முதல் அரசு ஒப்பந்ததாரராக பல்வேறு கட்டுமான பணிகளை மேற்கொண்டு வரும் இவர் பொதுப்பணித்துறை, நீர் மேலாண்மை துறை, குடிசை மாற்று வாரியம், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசு பணிகள் எடுத்து செய்து வருகிறார். இது மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் குறிப்பாக ஹரியானா, நொய்டா உள்ளிட்ட பகுதிகளிலும் பிஎஸ்என்எல் நிறுவனம் சார்ந்த பணிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் பெரியசாமியின் உறவினர் சண்முகம் மற்றும் செல்வக்குமார் வீடுகளில் நடைபெற்ற சோதனைகள் முடிவடைந்தன. அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்களைக் கொண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. மேலும் 3 ஆவது நாளாக தொடர்ந்து வருமான வரித்துறையினர் பெரியசாமியின் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த வாரம் துரைமுருகன் மற்றும் அவரது நண்பர்கள் வீட்டில் அதிகளவு பணம் கைப்பற்றியதன் அடிப்படையில் அங்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாகவும், துரைமுருகன் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது இவர் அதிக அளவு கட்டுமான பணிகளை மேற்கொண்டதாகவும், அச்சமயத்தில் இந்நிறுவனம் அசுர வளர்ச்சி அடைந்ததும் தெரிய வந்துள்ளது.