தமிழறிஞர் க.ப.அறவாணன் காலமானார் : எழுத்தாளர்கள் இரங்கல்
எழுத்தாளரும், மூத்த தமிழறிஞருமான க.ப. அறவாணன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
திருநெல்வேலி மாவட்டம் கடலங்குடி கிராமத்தில் 1941ஆம் ஆண்டு பிறந்தவர் அறவாணன். தமிழ் எழுத்தாளரான இவர், தமிழகத்தின் பல பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டக் குழு உறுப்பினராக இருந்துள்ளார். அத்துடன் மொழியியல், சமூக அறிவியல், இலக்கணம், வரலாறு, கல்வியியல் உள்ளிட்ட துறைகளில் 56 நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் தமிழ் மக்கள் வரலாறு, தமிழரின் தாயகம், கவிதை கிழக்கும், மேற்கும் ஆகியவை குறிப்பிடத்தக்கது.
தமிழ் எழுத்துக்களில் ஆர்வம் கொண்ட இவர், எழுத்தாளர்களை சிறப்பிக்க ஆண்டு தோறும் அறவாணர் என்ற விருதை சான்றோர்களுக்கு வழங்கி வந்தார். இவர் தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசினை மூன்று முறை பெற்றவர். அத்துடன் ஒரு முறை சிறந்த பேராசிரியருக்கான விருதையும் பெற்றவர். மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தராகவும், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தராகவும் பணியாற்றிவர். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், இன்று சென்னை அமைந்தகரையில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு தமிழ் எழுத்தாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.