திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்த அவகாசம் நீட்டிப்பு - உயர்நீதிமன்றம்
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்தி முடிக்கச் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் அக்டோபர் 30க்குள் அறிக்கை தாக்கல் செய்யச் சிறப்பு அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை ஜூன் 30 ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்ற காலக்கெடுவை நீட்டிக்கக்கோரி தயாரிப்பாளர் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மூன்று மாத கால அவகாசம் வழங்கி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதனால் நிர்வாக பணிகளை மேற்கொள்ள மாவட்ட பதிவாளரான என்.சேகரை தனி அதிகாரியாகத் தமிழக வணிகவரித்துறை நியமித்து உத்தரவிட்டது. தனி அதிகாரியை நியமித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தனி நிர்வாகியின் நியமனத்துக்குத் தடை விதிக்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.