ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!

ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!
ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நூல் விலை குறைப்பு, கோதாவரி – காவிரி இணைப்புத்திட்டத்தை துரிதப்படுத்துவது உள்ளிட்ட நான்கு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினார்.

பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தமிழகம் வந்தார். சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு தமிழக அமைச்சர்கள், ஆளுநர், எதிர்க்கட்சி தலைவர், அரசு அதிகாரிகள் முறைப்படி வரவேற்பு அளித்தனர். விமானத்தில் இருந்து மோடி தரையிறங்கியதும் வரவேற்பதற்காக முதலில் தமிழக அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன் இருந்தனர். அவர்களை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இருந்தார்.

விமானத்தில் இருந்து கீழே இறங்கிய பிரதமர் மோடி, அமைச்சர்களை கடந்ததும் எடப்பாடி பழனிசாமியை முதுகில் தட்டிக் கொடுத்து நலம் விசாரித்தார். வணங்கி நின்ற அவரது கைகளையும் இறுகப் பிடித்துக் கொண்டார் பிரதமர். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிரதமர் டெல்லி புறப்படும் போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்தனர். அப்போது, தமிழ்நாடுக்காக 4 கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் வழங்கினார்.

அதில், நூல் விலையை குறைக்க வேண்டும், கோதாவரி – காவிரி இணைப்புத்திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். மேலும், காவிரியில் மாசு ஏற்படுவதை தடுக்கவும், சுத்தமாக வைத்திருக்கவும் நடந்தாய் வழி காவிரி திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், சேலம் – சென்னை இடையேயான விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த சந்திப்பின்போது ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் பிரதமர் நரேந்திர மோடி தனி பேசியதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் தனித்தனியாக சந்தித்து பேசியதாகவும் அப்போதும் அரசியல் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் பேச்சில் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, டெல்லி திரும்பிய போது விமான நிலையத்தில் வழியனுப்ப சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் அளித்தார். மாலையில் சென்னை வந்த போது அடையாறு ஐஎன்எஸ் தளத்தில் பிரதமருக்கு அவர் வரவேற்பு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com