ஓகி புயல் சேதத்தை பார்வையிட கன்னியாகுமரி வருகிறார் மோடி
ஓகி புயல் பாதித்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை வரவிருக்கிறார்.
புயல் பாதித்த பகுதிகளின் சேதத்தை பார்வையிடும் பிரதமர், மீனவர்களையும், விவசாயிகளையும் நேரில் சந்திக்க உள்ளார். இதற்காக தனி விமானத்தில் முதலில் லட்சத்தீவு செல்லும் பிரதமர், அங்கு அகாதி, கவரெட்டி பகுதிகளுக்குச் சென்று புயல் பாதிப்புகளை பார்வையிடுகிறார். பின்னர் அங்கிருந்து திருவனந்தபுரம் செல்லும் பிரதமர்,. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வர உள்ளார். பிரதமரின் வருகையையொட்டி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கன்னியாகுமரிக்கு செல்ல உள்ளனர்.
கன்னியாகுமரி விருந்தினர் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். ஓகி பாதிப்புகள் குறித்து விவாதித்தபின், அரசு விருந்தினர் மாளிகையில், புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள், விவசாயிகளை சந்தித்து பேசும் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறுகிறார். ஓகி புயலால் தமிழகம் மற்றும் கேரளாவில் 88 மீனவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் ஏராளமானோரை காணவில்லை. இதற்கிடையே தமிழகத்திற்கு பேரிடர் கால நிவாரண நிதியின் 2 ஆவது தவணையை மத்திய அரசு விடுவித்துள்ளது. 561 கோடி ரூபாய் நிவாரண தொகையை தமிழக அரசுக்கு மத்திய அரசுவிடுவித்துள்ளது.