மெரினாவில் ஆயத்தப் பணிகள் தீவிரம் !

மெரினாவில் ஆயத்தப் பணிகள் தீவிரம் !
மெரினாவில் ஆயத்தப் பணிகள் தீவிரம் !

திமுக தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்வதற்கான ஆயத்தப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். ராஜாஜி ஹாலில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரதமர் மோடியும் தனி விமானத்தில் வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார்.

இதனிடையே கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி மறுத்துவிட்டது. மெரினாவுக்கு பதிலாக காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்குவதாக அரசு அறிவித்தது. இதை எதிர்த்து திமுக, உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையில், மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய, இடம் ஒதுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கேட்ட மு.க.ஸ்டாலின் கண்ணீர் விட்டார். ராஜாஜி ஹாலில் நின்றிருந்த அவர்,  உணர்ச்சி பெருக்கால் கண்ணீர்விட்டு அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி கும்பிட்டார். பின்னர் அவர் தடுமாறினார். அவரைக் கண்டதும் அருகில் இருந்த கனிமொழி, துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் கண்ணீர் விட்டனர். இதைக் கண்ட தொண்டர்களும் கண்ணீர் விட்டனர்.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்வதற்கான ஆயத்தப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. கருணாநிதி உடல் எப்போது அடக்கம் செய்யப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு திமுக சாப்பில் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் இன்று மாலை கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com