”ஒரே நாளில் 8 கொலைகள்” - பிரேமலதா விஜயகாந்த் அடுக்கடுக்கான கேள்வி!!
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்தான அவரது அறிக்கையில், 24 மணி நேரத்தில் 8 கொலைகள் நடைபெற்றதாகக் குறிப்பிட்டுள்ள அவர், சிவகங்கை மாவட்ட இரட்டைக் கொலை, மதுரை ஜெய்ஹிந்த்புரம் அருகே நடைபெற்ற கொலை மற்றும் கிருஷ்ணகிரி அருகே இளைஞர் ஒருவர் தாக்கி கொல்லப்பட்ட சம்பவங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். கொலை வழக்குகளில் உண்மைக் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வது எந்த வகையில் நியாயம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவது குறித்தும், தமிழகத்தில் டெங்கு பாதிப்பு, விவசாயக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், சென்னை பட்டினப்பாக்கம் மீனவர்களின் போராட்டம் மற்றும் விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலங்கள் மற்றும் கடலில் சிலைகள் கரைக்கும் நிகழ்வுகளுக்கு போதிய காவல் பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும், பிரேமலதா விஜயகாந்த் தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

