\
Premalatha Vijayakanth Calls for Life Imprisonment in Prisoner Death Case
பிரேமலதா விஜயகாந்த்web

சிறைக்கைதி மரணம் | ஆயுள் தண்டனை வழங்க பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!

சிறைக்கைதிகள் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உறுதியான நடவடிக்கை எடுக்க அரசு மீது பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
Published on

சபரிவர்மன் மரணம் தொடர்பாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சிறைக் கைதிகள் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மூன்று காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்தது போதாது; சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி, சபரிவர்மன் குடும்பத்துக்கு அரசு வேலை, ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட 35 வயது சபரிவர்மன், நீதிமன்ற உத்தரவின்படி நாகர்கோவில் கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக இருந்தபோது மர்மமாக உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடலில் 19 இடங்களில் காயங்கள், கை முறிவு, கட்டிப்போட்டு தாக்கிய அடையாளங்கள் இருப்பது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்ததால், சிறை வார்டன் ஜெகன் உட்பட 3 காவலர்கள் கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் .

இதுகுறித்து சிறையில் கைதிகளின் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிமர்மன் போலீசாரால் கைதானபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த நிலையில், சிறையில் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Sabari varman
Sabari varmanweb

தமிழக சிறைகளில் பல கைதிகள் படுகொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இந்த விவகாரத்தில் மூன்று காவல்துறையினரை பணியிடை நீக்கம் செய்திருப்பது மட்டுமே போதுமான தீர்வாகாது. இனி தமிழகத்தில் எங்கும் சிறைக் கைதிகள் படுகொலைகள் நடைபெறாத வகையில் அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சட்டத்தை மீறியவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கான அதிகாரம் நீதித்துறைக்கு மட்டுமே உள்ளது. சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டு ஒருவரின் உயிரைப் பறிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. மாற்றம் என்று கூறி ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த அரசு, இதுபோன்ற சம்பவங்கள் தொடந்து நடைபெறுவதன் மூலம் எந்தவிதமான மாற்றத்தையும் மக்களிடம் ஏற்படுத்தவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

எனவே, காவல்துறையில் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர், இந்த கொடூரமான குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், பாரபட்சமும் இன்றி அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

Sabari varman
Sabari varman web

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், சிறையில் காவலர்கள் தாக்குதலில் இறந்த சபரிவர்மனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூ.25 லட்சம் நிவாரணத் தொகையும் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Premalatha Vijayakanth Calls for Life Imprisonment in Prisoner Death Case
நாகர்கோவில் விசாரணை கைதி மரணம்.. கைதான 3 காவலர்கள் சஸ்பெண்ட்! என்ன நடந்தது?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com