எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணி போலீசில் புகார்
எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணி சாத்தூர் டவுன் காவல்நிலையத்தில் குடும்பத்தினருடன் சென்று புகார் அளித்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த ஒருவர் வெளிநாடு செல்வதற்காக உடல் பரிசோதனை செய்தபோது ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. விசாரணையில் 2 வாரங்களுக்கு முன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அவர் ரத்த தானம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது ரத்தம் யாருக்கு செலுத்தப்பட்டது என்ற பட்டியலை எடுத்து பார்த்தபோது, சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அப்பெண்ணின் ரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தபோது அவர் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
கர்ப்பிணிக்கு அலட்சியத்தால் எச்ஐவி ரத்தம் ஏற்றிய மருத்துவமனை தொழில்நுட்ப வல்லுநரான ஒப்பந்த ஊழியர் வளர்மதி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன் மேலும் 2 ஒப்பந்த ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணி சாத்தூர் டவுன் காவல்நிலையத்தில் குடும்பத்தினருடன் சென்று புகார் அளித்துள்ளார். தனது இந்த நிலைமைக்கு காரணமாக சாத்தூர் அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கி ஊழியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.