கர்ப்பிணி பெண் வெட்டிக்கொலை - முதல் கணவருக்கு போலீஸ் வலைவீச்சு
இரண்டாவது கணவருடன் இருந்த கர்ப்பிணி பெண் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செக்காணூரணி பகுதியில் அம்சத் என்ற கர்ப்பிணி பெண் தனது இரண்டாவது கணவர் மதன் என்பவருடன் வசித்து வந்தார். இவர்கள் இருவரும் முறைப்படி திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் வசித்து வந்த வீட்டின் கதவை உடைத்த நேற்று உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், அம்சத்தை சரமாரியாக வெட்டியுள்ளனர். அதை தடுக்க முயன்ற மதனுக்கும் வெட்டு விழுந்துள்ளது.
இதில் அம்சத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மதன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அம்சத் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அத்துடன் இந்த கொலையை முதல் கணவர் வடிவேலு தான் ஆத்திரத்தில் செய்திருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி, அவரை தேடி வருகின்றனர்.