துலுக்கர்பட்டி அகழாய்வு: “திஈய, திச, குவிர(ன்)” தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு கண்டுபிடிப்பு!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே துலுக்கர் பட்டியில் 2ம் கட்டமாக நடைபெற்று வரும் அகழாய்வில், திஈய, திச,குவிர(ன்) முதலிய தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பண்டைய கால தொன்மையான பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
துலுக்கர்பட்டி அகழாய்வு
துலுக்கர்பட்டி அகழாய்வுPT

தமிழர்களின் தொன்மையான வாழ்வியல் நாகரிகம்தான் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ளது என்பதை உலகறியச் செய்யும் வகையில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இதன் தொடர்சியாக நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட வள்ளியூர் அருகேயுள்ள துலுக்கர்பட்டி கிராமம் நம்பியாற்று படுகையிலும், விளாங்காடு பகுதிகளிலும் அகழாய்வு மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார்.

துலுக்கர்பட்டி அகழாய்வு
துலுக்கர்பட்டி அகழாய்வுPT

அதன்படி நெல்லை மாவட்டம் துலுக்கர்பட்டியில் முதல் கட்ட அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்கால தொன்மையான ஓடுகள், குவளைகள், பாசிமணிகள் போன்ற பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டது.

செஸ் விளையாடும் மண்ணால் ஆன காய்கள் கண்டுபிடிப்பு!

இந்நிலையில் கீழடி, துலுக்கர்பட்டி உட்பட தமிழகத்தில் எட்டு இடங்களில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகளை கடந்த மாதம் ஏப்ரல் 6ம் தேதி தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதன்படி நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள துலுக்கர்பட்டி விளாங்காடு பகுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

துலுக்கர்பட்டி அகழாய்வு
துலுக்கர்பட்டி அகழாய்வுPT

அகழாய்வின் போது செஸ் விளையாடும் சூடு மண்ணால் ஆன காய்கள், செம்பினால் ஆன மோதிரம், காதில் அணியும் சூடு மண்ணால் ஆன ஆபரணம், ஈட்டி முனை, பானை, பாசிகள், வேட்டையாட பயன்படுத்தும் கவன் கல், எலும்புகள், பழங்கால கூரைவீடுகள் இருந்ததற்கான ஆதாரங்கள் உட்பட 500க்கு மேற்பட்ட பழங்கால பொருட்கள் வகைகள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில் 1009 பொருட்கள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

புலி, திஈய, திச, குவிர(ன்) தமிழ் எழுத்து பொறிப்பு கண்டெடுப்பு!

2ஆம் கட்ட பணிகளில் முதலில் தமிழ் எழுத்துகளில் புலி என்று பொறிக்கப்பட்டுள்ள கருப்பு சிவப்பு பானை ஓடு கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பானை ஒடுகளில், திஈய, திச, குவிர(ன்) ஆகிய பொறிப்புகள் கிடைக்கப்பட்டுள்ளது. இதுவரையிலும் கண்டெடுக்கப்பட்டுள்ள 1100 பொருட்கள் அனைத்தும் தனித்தனியாக சேகரிக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் சென்னையில் உள்ள தொல்லியல் துறையின் ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளதாக இயக்குனர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார். இப்பகுதியானது இரும்பு காலப் புதைவிட பகுதியாகவும், வாழ்விடப் பகுதியாகவும் கருதப்படுவதால் இன்னும் பல அறிய வகை தொல்லியல் பொருட்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து பேசியிருக்கும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “நம்பியாற்றின் கரையில் எழுத்தறிவு பெற்ற தமிழ்ச் சமூகம் தனக்கே உரிய நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளோடு வாழ்ந்து வந்தமைக்கு இது நல்ல சான்றாகும்” என்று பெருமையுடன் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com