வாட்ஸ்அப்பில் புகைப்படம்; பேஸ்புக்கில் ஏலம் - ஊரடங்கு நேரத்தில் வித்தியாச முயற்சி!
கொரோனா மக்கள் முடக்கத்தால் காகம் போன்ற பறவைகள், தெருநாய்கள் போன்றவை உணவின்றி வாடி வருகின்றன. இவைகளுக்கு மறு வாழ்வு அளிக்க பொதிகைச்சாரல் என்ற அமைப்பு நூதன முயற்சியில் இறங்கியுள்ளது.
பொதிகைச்சாரல் என்ற அமைப்பை தங்கமதி மற்றும் பூதத்தான் ரமேஷ் என்ற இரு நண்பர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பு தற்போது புதிய முயற்சியை தொடங்கியுள்ளது. லாக்டவுன் நாட்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் இருந்து கொண்டே தயாரிக்கும் கலைநயமிக்க பொருட்களை விற்பனை செய்ய வழி ஏற்படுத்தியுள்ளனர்.
அதாவது வீட்டில் உருவாக்கப்படும் கலை பொருட்கள், ஓவியங்களை புகைப்படம் எடுத்து தங்களது மொபைல் (9962086565) எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் அனுப்புமாறு அந்த அமைப்பில் கூறுகின்றனர். அந்த கலைப்பொருட்கள், ஓவியங்கள் போன்றவற்றை பொதிகைச்சாரலின் பேஸ்புக் பக்கத்தில் ஏலம் விடப்படும் என தெரிவித்துள்ளனர்.
இப்படி திரட்டப்படும் நிதியில் பாதித்தொகை பொருட்களை உருவாக்கியவருக்கும், மீதித்தொகை வாயில்லா ஜீவன்களின் நலன்களுக்கும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து கூறிய தங்கமதி, பொதுமக்கள் உருவாக்கும் கலைபொருட்களுக்கான குறைந்தபட்ச விலையை அவர்களே நிர்ணயித்து கொள்ளலாம். 25 பேர் இணைந்தவுடன் அவை ஒரு குழுவாக உருவாக்குவோம். அவர்களது பொருட்களை பேஸ்புக்கில் உள்ள எங்களது பொதிகைச்சாரல் குழுவில் ஏலம் விடுவோம்.
இதில் மூன்று வயது முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகள் ஒரு வகை, 11 வயது முதல் 18 வயது வரை ஒரு வகையாகவும், 19 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஒரு வகையாகவும் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டத்தின் மூலம் வாயில்லா ஜீவன்களுக்கு உதவுவது மட்டுமின்றி, வீட்டில் இருந்துகொண்டு சுயமாக சம்பாதிக்கலாம் என்ற உத்வேகத்தை அளிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.