‘தபால் தேர்வு பிராந்திய மொழிகளில் நடத்தப்படும்” - மத்திய அரசு உறுதி
தபால் தேர்வுகளை பிராந்திய மொழிகளில் எழுதலாம் என்ற அறிவிப்பாணையை ரத்து செய்யவில்லை என்று மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை 14 தேதி நாடுமுழுவதும் தபால் துறை தேர்வுகள் நடத்தப்பட்டன. அதில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள் மட்டுமே இடம்பெற்றிருந்தது. அதனையடுத்து, ஆங்கிலம், இந்தியில் தேர்வு நடைபெறுவதற்கு தமிழகத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத்தொடர்ந்து தபால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
இதற்கிடையே தபால் தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படும் என்ற அறிவிப்பை எதிர்த்து திமுக மாணவரணி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு விசாரித்தனர். அத்துடன் பிந்திய மொழிகளில் தபால் தேர்வுகள் நடத்தப்படும் என மே மாதம் 10ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்த அரசாணை குறித்து தெளிவுபடுத்துமாறும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் தேர்வு எழுதலாம் என ஜூலை 11ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டிருப்பதாக கூறினார். ஆனால் அதற்கு முன்னர் மே 10ஆம் தேதி பிராந்திய மொழிகளில் தபால் தேர்வை எழுதலாம் என வெளியிடப்பட்டிருந்த அரசாணை இன்னும் ரத்து செய்யப்படவில்லை என்று உறுதியளித்தார். அத்துடன் அதுதொடர்பாக நாளை ஆவணங்களை தாக்கல் செய்வதாகவும் கூறினார். இதையேற்ற நீதிபதிகள் வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.