வாணியம்பாடி
வாணியம்பாடிபுதிய தலைமுறை

பட்டியலின இளைஞரை காதலித்து திருமணம்... ஆத்திரத்தில் பெண்ணை சரமாரியாக தாக்கி கடத்தல்

வாணியம்பாடி அருகே பட்டியலின இளைஞரை காதலித்து திருமணம் செய்த பெண்ணை கடத்திச் சென்ற தந்தை, அண்ணன்கள், மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் மீது பெண்ணின் கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்

வாணியம்பாடி அருகே பட்டியலின இளைஞரை காதலித்து திருமணம் செய்த பெண்ணை கடத்திச் சென்ற தந்தை, அண்ணன்கள், மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் மீது பெண்ணின் கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அம்பலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் இளைஞரின் கிராமத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் தியாகு (21). பட்டியலின இளைஞரான இவரை அதே கிராமத்தின் மாற்று சமூகத்தை சேர்ந்த நர்மதா என்ற பெண், பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி திருமணம் செய்தார்.

இந்நிலையில், பெண்ணின் பெற்றோர் தனது மகளை காணவில்லையென அம்பலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, டிசம்பர் மாதம் 7-ஆம் தேதி தியாகு, மற்றும் நர்மதாவை அம்பலூர் காவல்துறையினர் வாணியம்பாடி நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், பெண்ணின் விருப்பபடி, நர்மதாவை அவரது கணவர் தியாகுவுடன் அனுப்பி வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து தியாகு தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி தனது மனைவியுடன் தர்மபுரி மாவட்டத்தில் தங்கியிருந்த நிலையில், தியாகுவிற்கு பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் அண்ணன்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். தொடர்ந்து, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தியாகு தனது சொந்த ஊரான சங்கராபுரம் பகுதிற்கு சென்றுள்ளார்.

தியாகு வீட்டிற்கு வந்திருப்பதையறிந்த நர்மதாவின் பெற்றோர், மற்றும் அவரது உறவினர்கள், நேற்று தியாகுவின் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று தியாகு மற்றும் அவரின் பெற்றோரை தாக்கியதோடு நர்மதாவையும் தாக்கி கடத்திச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து தியாகு தனது மனைவி நர்மதாவை, அவரது தந்தை ராஜேந்திரன், அண்ணன்கள் கோவிந்த ராஜ், பிரபு, ராஜேஷ் மற்றும் ஈச்சங்கால் ஊராட்சி மன்றத் தலைவர் ஏழுமலை ஆகியோர் கடத்திச்சென்றதாகக் கூறி அம்பலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் நர்மதாவை கடத்திச்சென்ற அவரது தந்தை மற்றும் அண்ணன்கள் என 5 பேர் மீது அம்பலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நர்மதா மற்றும் அவரது பெற்றோர், அண்ணன்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

வாணியம்பாடி
மயிலாடுதுறை: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக் கொடி காட்ட முயற்சித்ததில் தள்ளுமுள்ளு!

மேலும் மாற்று சமூக இளைஞரை திருமணம் செய்த பெண்ணை அவரது பெற்றோரே கடத்திச் சென்றதால் சங்கராபுரம் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com