அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் ஜெயலலிதா. அவர் மறைவை தொடர்ந்து வழங்கப்படும் இந்த தீர்ப்பு சசிகலாவின் அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாக இருப்பது குறித்து நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், நீதியில் நியாயமும் கலந்திருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தீர்ப்பு வேறு, தீர்வு வேறு என்றும் அதில் தெரிவித்துள்ள கமல்ஹாசன், உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியாகவுள்ள இன்றைய தினமும் மற்றுமொரு நாளே என கூறியுள்ளார். பொறுத்தாரே பூமியாள்வார் என்றும் அதில் கமல்ஹாசன் இறுதியாகத் தெரிவித்துள்ளார்.