புகார் அளித்த பெண் ; கண்டுகொள்ளாத பொள்ளாச்சி போலீஸ் - அதிர்ச்சி வீடியோ
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டப்பட்டது தொடர்பாக புகார் அளித்த பெண் பல உண்மைகளை கூறியுள்ளார்.
பொள்ளாச்சியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அதனை ஆபாச வீடியோக்கள் எடுத்து பெண்கள் மிரட்டப்பட்ட சம்பவம் துயரத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க வந்தால், உரிய நடவடிக்கை எடுப்போம் என கோவை எஸ்.பி மற்றும் பொள்ளாச்சி காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த வகையில் ஒரு பெண் புகார் அளித்துள்ளார்.
அப்பெண் புதிய தலைமுறையிடம் பேசிய போது, “3 வருடங்களாக நாங்கள் காதலித்தோம். ஆசை வார்த்தை காட்டி என்னை கூட்டிச் சென்று பலவந்தப்படுத்தி, ஆபாச புகைப்படங்கள் எடுத்தான். என்னை மிரட்டி என்னிடம் இருந்து காசு, பாணம் நிறைய வாங்க ஆரம்பித்தான். அதன்பின்னர் அவனுக்கு தேவையான பைக், போன் முதலியவற்றையும், வீட்டுக்கு தேவையான பொருட்களையும் வாங்கிக்கொடுக்கச் சொல்லி என்னை மிரட்டினார். இல்லையென்றால் புகைப்படங்களை வெளியிடுவேன் என மிரட்டினான். உன் தந்தைக்கு அனுப்புவேன், ஃபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் எல்லாம் பரப்பி மானத்தை வாங்குவேன் என மிரட்டினான். என்னைப்போல பாதிக்கப்பட்ட பெண்கள், நான் அவனை லவ் பண்ணுகிறேன் என தெரிந்ததும் என்னை அழைத்து பேச ஆரம்பித்தார்கள்.
நானும் உங்களைப் போன்று ஏமாந்துவிட்டேன், வாருங்கள் அனைவரும் இணைந்து அவன்மீது புகார் கொடுக்கலாம் என அழைத்தேன். ஆனால் அவர்கள் வர மறுத்துவிட்டனர். அப்படி வந்தால் தங்கள் குடும்பமே தற்கொலை செய்துகொள்ளும் என்றார்கள். இந்த பிரச்னையில் இருந்து எனக்கு ஒரு முடிவு வேண்டும், இனிமேல் என்னைப்போன்று யாரும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக நான் புகார் அளித்தேன். காவல்துறை இதற்குரிய நடவடிக்கை எடுத்து அவனுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். நேற்று மாலை புகார் அளித்தேன், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
என்னிடம் எதுவுமே அதைப்பற்றி போலீஸ் பேசவில்லை. காத்திருக்கங்கள் என்று தான் கூறினார்கள். அழைத்துப் பேசவேயில்லை. என்னிடமே சுமார் 15 பெண்கள் பேசியுள்ளனர். நான் விசாரித்து பார்த்த வரைக்கும், அவர் வேலை செய்யும் கம்பெனியில் சுமார் 100 பெண்கள் இருக்கின்றனர். இவன் அரிசிக்கடத்தல், கஞ்சா கடத்தல் உள்ளிட்ட குற்றங்களை செய்து வருகிறான். இதை அவனே என்னிடம் சொல்லியிருக்கிறான். அவனை விசாரித்தால் நிறைய உண்மைகள் வெளிவர வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளார்.
இந்தப் பெண்ணை ஏமாற்றியவன், தற்போது கைது செய்யப்பட்டுள்ள 4 பேரில் ஒருவன் அல்ல. ஆனால் அதேபோன்று ஒருவன் தான். எனவே இந்தக் கும்பலுக்கும், அவனுக்கும் தொடர்பிருக்கலாம் எனப்படுகிறது. அல்லது, இந்தக் கும்பலைப் போன்று இன்னும் சில கும்பல் பொள்ளாச்சியில் இருக்கலாம் என கூறப்படுகிறது.