பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு சிபிஐக்கு மாற்றம்: அரசாணை வெளியீடு

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு சிபிஐக்கு மாற்றம்: அரசாணை வெளியீடு
பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு சிபிஐக்கு மாற்றம்: அரசாணை வெளியீடு

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை சிபிசிஐடியில் இருந்து சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

ஃபேஸ்புக் மூலம் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அதை வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு உள்பட 4 பேர் சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

(பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து மாணவிகள் போராட்டம் நடத்தியபோது)

தமிழகத்தையே உலுக்கிய இந்தச் சம்பவத்துக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்தனர். பொள்ளாச்சியில்‌ நடந்துள்ள இந்தப் பாலியல் கொடூரத்தைக் கண்‌டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். சில அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டன. சிலர் போராட்டங்களுக்கு அறிவிப்பு விடுத்துள்ளனர்.

இதனிடையே, வழக்கு விசாரணை தொடர்பாக காவல்துறையினர் மெத்தனமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தன. அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பில் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை அனுப்பியிருந்தது. இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை சிபிசிஐடியில் இருந்து சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com