தமிழகத்தில் 65.3 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து!
தமிழகத்தில் இன்று 65 லட்சத்து 30 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இளம்பிள்ளைவாதம் எனப்படும் முடக்கவாத நோயான போலியோவை ஒழிக்கும் வகையில், மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்தப்படுகிறது. இதன்படி நாடு முழுவதும் 17 கோடி குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்க திட்டமிடப்பட்டது. இதற்காக 24 லட்சம் தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தமிழகத்தைப் பொருத்தவரையில் 43 ஆயிரத்து 51 மையங்களில் 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 65 லட்சத்து 30 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்கப்பட்ட நிலையில் விடுபட்டவர்களை கண்டறிந்து சொட்டுமருந்து வழங்கும் பணி அடுத்த 3 நாட்களுக்கு நடைபெறும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.