ஹெல்மெட் அணியாத எஸ்.ஐ சஸ்பெண்ட் - காவல்துறை அதிரடி
சென்னையில் ஹெல்மட் அணியாத காவல் உதவி ஆய்வாளரை பணி இடைநீக்கம் செய்து காவல்துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து சென்னை முழுவதும் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. தற்போது பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று போலீசார் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையினரே ஹெல்மெட் அணியாமல் செல்வதாக நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இதனை அடுத்து தமிழக டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில் அனைத்து காவலர்களும் போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும், ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்திருந்தார் இல்லையெனில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதன்படி ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய, மாம்பலம் சட்ட ஒழுங்கு உதவி ஆய்வாளர் மதன்குமாரை இணை ஆணையர் மகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். ‘கெட் பி’ எனப்படும் போக்குவரத்து காவல்துறை அறிமுகப்படுத்திய செயலியை பயன்படுத்தி, உதவி ஆய்வாளர் மதன்குமார் ஹெல்மெட் அணியாததை புகைப்படம் எடுத்து போக்குவரத்து காவல்துறைக்கு பொதுமக்களில் ஒருவர் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில் சிக்கிய உதவி ஆய்வாளர் என்று தெரிந்தவுடன், சம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அதிகாரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் அதிரடியாக மதன்குமாரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.