கோவை மாணவி வன்கொடுமை| 3 பேரை சுட்டுப்பிடித்த காவல்துறை.. குற்றவாளிகளின் விவரம் வெளியீடு!
கோவை கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மூன்று குற்றவாளிகளை காவல்துறை சுட்டுப்பிடித்துள்ளது. 7 தனிப்படைகள் அமைத்து தேடப்பட்ட குற்றவாளிகள் துடியலூர் அருகே பதுங்கியிருந்தனர். தப்ப முயன்றபோது, காவலர் சந்திரசேகரை காயப்படுத்திய குற்றவாளிகள் துப்பாக்கி சூட்டில் பிடிபட்டனர்.
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவி தனது ஆண் நண்பருடன் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி இரவு பீளமேடு விமான நிலையம் பின்புறம் உள்ள ஒரு காலி இடத்தில் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்பொழுது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் தங்கள் கையில் இருந்த கத்தியால் கார் கண்ணாடியை உடைத்து மாணவியின் ஆண் நண்பரை தாக்கியுள்ளனர். அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையில், மாணவியை வலுக்கட்டாயமாக 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடியது..
இந்த குற்றச்செயல் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் 7 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் தேடப்பட்ட 3 குற்றவாளிகளையும் சுட்டுப்பிடித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது..
சுட்டுப்பிடித்த காவல்துறை..
தமிழகத்தை உலுக்கிய கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் 7 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் துடியலூர் அருகே வெள்ளக்கிணறு பகுதியில் குற்றவாளிகள் மூன்று பேரும் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து அங்கு சென்ற பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் அர்ஜுன் தலைமையிலான குழுவினரும் சரவணம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் குணசேகர் தலைமையிலும் காவல்துறையினர் குற்றவாளிகளை சுற்றி வளைத்துள்ளனர்.
அப்போது தப்ப முயன்ற குற்றவாளிகளை பிடிக்க முயன்ற தலைமை காவலர் சந்திரசேகர் என்பவரை இடது கையில் வெட்டியுள்ளனர். இதனை அடுத்து தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட தொடங்கிய காவல்துறையினர் குற்றவாளிகளில் 2 பேரை இரண்டு கால்களிலும் ஒரு குற்றவாளியை ஒரு காலிலும் சுட்டு பிடித்துள்ளனர்.
பிடிபட்ட குற்றவாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டபோது மூவரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த குணா என்கிற தவசி , சதீஷ் என்கிற கருப்பசாமி, கார்த்திக் என்கிற காளீஸ்வரன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனிடையே சுடப்பட்ட மூன்று குற்றவாளிகளையும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காவல்துறையினர் சேர்த்துள்ளனர். காயம்பட்ட தலைமை காவலர் சந்திரசேகரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

