”சென்னையில் இரவு நேர ஊரடங்கை பின்பற்றாத 547 வாகனங்கள் பறிமுதல்”- காவல்துறை தகவல்

”சென்னையில் இரவு நேர ஊரடங்கை பின்பற்றாத 547 வாகனங்கள் பறிமுதல்”- காவல்துறை தகவல்
”சென்னையில் இரவு நேர ஊரடங்கை பின்பற்றாத 547 வாகனங்கள் பறிமுதல்”- காவல்துறை தகவல்

சென்னையில் நேற்று இரவு நேர ஊரடங்கின்போது விதிமீறிய குற்றத்துக்காக நள்ளிரவில் 547 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனைத் தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு நேற்று இரவு முதல் அமலுக்கு வந்தது. இரவு 9 மணி முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், கடைகளை மூடத் தொடங்கினர். திறந்து மூடாமல் இருந்த கடைகளை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு என்பதால், காவல்துறையினர் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சென்னையில் 312 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணித்தனர். முதல் நாள் என்பதால், சிலர் இரவு 10 மணிக்குப் பிறகும் வாகனங்களில் செல்வதை காண முடிந்தது. அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்து, மக்கள் வெளியே சுற்ற வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

சென்னை ஒஎம்ஆர், ஈசிஆர் சாலைகளிலும், இரவு நேர ஊடரங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. அத்தியாவசிய பணி மற்றும் மருத்துவ உதவிக்காக செல்வோர் அதற்கான ஆவணங்களை எடுத்துச் சென்றால், அனுமதிக்கப்பட்டனர். இரவு நேர ஊரடங்கால் பெரும்பாலான இடங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இதுதொடர்பாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ள தகவலில், “சென்னையில் இரவுநேர ஊரடங்கின்போது விதிகளை மீறியதாக 547 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 501 இருசக்கர வாகனங்கள், 32 ஆட்டோக்கள், 14 இலகுரக வாகனங்கள் அடங்கும். இவையன்றி முகக் கவசம் அணியாதது தொடர்பாக 462 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com