சேலம்: அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை பத்திரமாக மீட்பு
செய்தியாளர்: மோகன்ராஜ்
சேலம், பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கதுரை என்பவரின் மனைவி வெண்ணிலாவிற்கு சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை நேற்று பிற்பகல் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிறந்து ஐந்து நாட்களே ஆன இந்த குழந்தையை பெண் ஒருவர் தூக்கிச் சென்றது சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து சேலம் மாநகர காவல் உதவி ஆணையாளர் ஹரி சங்கரி தலைமையிலான போலீசார், பல்வேறு கோணங்களில் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டனர்.
இந்நிலையில், பலமணி நேர போராட்டத்திற்குப் பிறகு அதிகாலை 2 மணி அளவில் காரிப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக வினோதினி என்ற பெண்ணையும் கைது செய்த காவல்துறையினர், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.