இபிஎஸ் தலைமையிலான உண்ணாவிரத போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பு
எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெறுவதாக சொல்லப்படுள்ள அடையாள உண்ணாவிரதம் போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்று காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களால் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் எதிர்கட்சி துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் ஆர்.பி உதயகுமாரை எதிர்கட்சி துணைத் தலைவராக அங்கீகரிக்கக்கோரி அ.தி.மு.க சார்பில் பேரவை சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் கடிதம் வழங்கி வெகுநாட்கள் ஆகியும் இதுவரை ஆர்.பி உதயகுமாரை எதிர்கட்சி துணைத் தலைவராக அங்கீகரிக்காததை குறிப்பிட்டு அ.தி.மு.க-வைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இன்று சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும், ஆர்.பி உதயகுமாரை எதிர்கட்சி துணைத் தலைவராக பேரவையில் அங்கீகரிக்காததை கண்டித்து நாளை அ.தி.மு.க சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்துக்கு அனுமதிகோரி காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளதாகவும், திட்டமிட்டபடி உண்ணாவிரதம் நடைபெறும் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தெரிவித்திருந்தார். இந்த அனுமதி குறித்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் மற்றும் அ.தி.மு.க வழக்கறிஞர் பாபு முருகவேல் ஆகியோர் நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த மனுவை பரிசீலனை செய்து போலீசார் உண்ணாவிரத போராட்டத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் தெரிய வருகிறது.